மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை


மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை
x
தினத்தந்தி 11 Oct 2020 10:20 PM GMT (Updated: 11 Oct 2020 10:20 PM GMT)

மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன், முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் நடத்தப்படும். இதில் யானைகள் அணிவகுத்து செல்லும். அதைதொடர்ந்து அலங்கார ஊர்திகள், கலைக்குழுவினர், போலீஸ் குழுவினர், குதிரைபடைகள் இந்த ஊர்வலத்தில் இடம்ெ-றும்.இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு, கலாசார நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வார்கள். மைசூரு நகரமே 10 நாட்களுக்கு விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால், மைசூரு தசரா விழாவை மிக எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

மைசூரு தசரா தொடக்க விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா போராளிகளை கவுரவப்படுத்தும் விதமாக இந்த விழாவை டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து மைசூரு அரண்மனையில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்த கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதனால் மைசூருவில் 17-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை தினமும் உள்ளூர் கலைஞர்கள் மூலம் 2 மணி நேரம் கலாசார நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் அந்த நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

கலாசார நிகழ்ச்சிகள்

இந்த நிலையில் மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தசரா விழாவின்போது என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது குறித்து எடியூரப்பா விளக்கி கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பவர்கள், முன்கூட்டியே கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், வைரஸ் தொற்று இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி அறிவுறுத்தினார்.

Next Story