கொரோனா பரவலை தடுக்க குளித்தலை கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தல்


கொரோனா பரவலை தடுக்க குளித்தலை கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2020 11:17 PM GMT (Updated: 11 Oct 2020 11:17 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க குளித்தலை கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.

குளித்தலை, 

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில், குளித்தலை நகரப்பகுதியில் இயங்கி வரும் மளிகை, செல்போன், ஜவுளி, ஓட்டல் போன்ற கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், பேன்சி ஸ்டோர், பேக்கரி போன்ற கடை உரிமையாளர்கள் மற்றும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சசீதர் தலைமை தாங்கினார். மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்க கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முககவசம் அணிவதன் முக்கியத்துவம், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை எவ்வாறு சமூக இடைவெளி கடைப்பிடிக்க செய்வது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிக் கூறினார். பின்னர் கடை உரிமையாளர்களுக்கு முககவசம், சானிடைசர் ஆகியவற்றை அவர் வழங்கினார்.

இதில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. மேலும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பேன் என்ற வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திடும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், வியாபாரிகள் சங்க தலைவர் பல்லவிராஜா மற்றும் பல்வேறு கடை உரிமையாளர்கள், போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story