புதுவை தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை திருட்டு


புதுவை தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 Oct 2020 10:33 PM GMT (Updated: 12 Oct 2020 10:33 PM GMT)

தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகையை திருடி சென்றவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை கோலாஸ்நகர் காந்தி வீதியை சேர்ந்தவர் சுஜய்காந்த் (வயது 41). தொழிலதிபர். முத்தியால்பேட்டையில் மோட்டார் கம்பெனி ஷோரூம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடினார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் ஒரு சிலரை மட்டும் அழைத்து வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடியதாக தெரிகிறது. அதன்பின் குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகளை கழற்றி படுக்கை அறையில் இருந்த அலமாரியில் வைத்து இருந்ததாக தெரிகிறது.

நகைகள் திருட்டு

மறுநாள் அலமாரியில் இருந்த நகைகளை அவர்கள் பார்த்தபோது 5 ஜோடி வைர கம்மல்கள், 3 மோதிரங்கள், கைச்சங்கிலி மற்றும் 2 வாட்சுகள் ஆகியவை காணாமல் போய் இருந்தன. தேடிப்பார்த்தும் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே யாரோ அந்த நகைகளை திருடிச் சென்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் சுஜய்காந்த் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.

தெரிந்த நபர்கள்

வீட்டில் இருந்த மற்ற பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்துள்ளது. எனவே இந்த திருட்டு சம்பவத்தில் நன்கு தெரிந்த நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதன்படி வீட்டிற்கு வந்தவர்கள், வேலை செய்தவர்கள் விவரங்களை சேகரித்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story