தென்காசி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் 582 பேர் கைது


தென்காசி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் 582 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2020 11:16 PM GMT (Updated: 12 Oct 2020 11:16 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 582 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த சட்டம், தேசிய கல்விக்கொள்கை போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது.

தென்காசி பழைய பஸ் நிலையம் பகுதியில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் இசக்கி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 41 பேரை தென்காசி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

செங்கோட்டை-சுரண்டை

இதேபோன்று செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் நடந்த சாலைமறியலில் தாலுகா துணை செயலாளர் சுந்தர் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர். சுரண்டை பஸ் நிலையம் அருகில் நடந்த சாலைமறியலில் தாலுகா செயலாளர் அய்யப்பன் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையம் அருகில் நடந்த சாலைமறியலில் மாவட்ட குழு உறுப்பினர் வேலாயுதம் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். புளியங்குடி காமராஜர் சிலை அருகில் நடந்த சாலைமறியலில் மாவட்ட பொருளாளர் சுப்பையா உள்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகிரி-சங்கரன்கோவில்

சிவகிரியில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், கிளை செயலாளர் சமுத்திரம் உள்பட 188 பேரை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே நகர செயலாளர் முத்துசாமி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். சங்கரன்கோவில் தேரடி திடல் பகுதியில் நகர செயலாளர் குருசாமி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 111 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திருவேங்கடம் காந்தி மண்டபம் எதிரே மண்டல செயலாளர் அந்தோணி ராஜ் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய சாலைமறியலில் 192 பெண்கள் உள்பட 582 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story