மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா என விமர்சித்து கடிதம் கவர்னருக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு


மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா என விமர்சித்து கடிதம் கவர்னருக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 9:42 PM GMT (Updated: 13 Oct 2020 9:42 PM GMT)

மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருக்கும் பிரச்சினையில், மதசார்பின்மைக்கு திடீரென மாறி விட்டீர்களா? என்று விமர்சித்து கவர்னர் எழுதிய கடிதத்துக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.

வழிபாட்டு தலங்கள் மூடல்

எனவே ஊரடங்கில் படிப்படியாக தான் தளர்வுகளை செய்ய முடியும் என மாநில அரசு அறிவித்து அதன்படி செயல்பட்டு வருகிறது. ஆனாலும் படிப்படியாக பெரும்பாலான தளர்வுகள் செய்யப்பட்டு விட்டன.

ஆனால் மராட்டியத்தில் சுமார் 7 மாதங்களாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டே உள்ளது. எனவே கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்களை திறக்க பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்து உள்ளனர். நேற்றும் பல்வேறு மத அமைப்புகள் சார்பில் நடந்த மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு பா.ஜனதா ஆதரவு அளித்தது.

கவர்னர் கடிதத்தால் மோதல்

இதற்கு மத்தியில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி எழுதிய கடிதத்தால் அவருக்கும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கும் இடையே மோதல் வெடித்து உள்ளது.

மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

மாறிவிட்டீர்களா?

நீங்கள் இந்துத்வாவின் தீவிர பக்தராக இருந்தீர்கள். முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றவுடன் அயோத்திக்கு சென்று நீங்கள் ராமரின் பக்தர் என பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். ஆஷாடி ஏகாதசிக்கு பண்டர்பூர் சென்று விட்டல் சாமி கோவிலில் பூஜை செய்தீர்கள். தற்போது வழிபாட்டு தலங்களை திறக்காமல் தள்ளி வைக்க தெய்வ வாக்கு எதையும் பெற்றீர்களா என்ற ஆச்சரியம் எனக்கு உள்ளது. அல்லது உங்களால் வெறுக்கப்பட்ட மதசார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா?. வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல மாநிலத்தில் பார்கள், ஓட்டல்கள், கடற்கரைகள் திறக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்கள் மட்டும் மூடப்பட்டு இருப்பது முரணாக உள்ளதாகவும் கவா்னர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

உத்தவ் தாக்கரே பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவர்னருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திடீரென முழு ஊரடங்கை அமல்படுத்தியது சரியானது இல்லை. அதேபோல ஊரடங்கை முழுமையாக ஒரே நேரத்தில் தளர்த்துவதும் சரியாக இருக்காது. ஆம்... நான் இந்துத்வாவை பின்பற்றும் ஒருவன் தான். எனது இந்துத்வாவுக்கு நீங்கள் சான்றிதழ் அளிக்க தேவையில்லை.

நீங்கள் கவர்னராக பதவி ஏற்ற அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சம் மதசார்பின்மை இல்லையா?.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-மந்திரி ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்துத்வா தானா?

அதே நேரத்தில் கவர்னரின் கோரிக்கையின்படி வழிபாட்டு தலங்களை திறக்க தீவிரமாக பரிசீலிப்பதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதேபோல அந்த கடிதத்தில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறிய ஒருவரை (நடிகை கங்கனா ரணாவத்) நீங்கள் அழைத்து பேசியது இந்துத்வா தானா? எனவும் கவர்னருக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

இதற்கிடையே கவர்னரின் கடிதத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் நிருபர்களிடம் கூறுகையில், கவர்னர், முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இந்த கடிதத்தை ஜனாதிபதி ஆமோதிப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மாநில அரசின் செயல்பாடுகளில் கவர்னர் தலையிட கூடாது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மேலும் இது குறித்து அவர், “இது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு. முதல்-மந்திரி, மந்திரி சபை ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்துவது குறித்து முடிவு எடுத்து கொள்ளும். ஒருவர் இந்துத்வாவாதியா, இல்லையா என்பது இங்கு தேவையில்லை. அரசாங்கம் அரசியல் அமைப்பின்படிதான் செயல்படுகிறதா, இல்லையா என்பதை தான் பார்க்க வேண்டும். உத்தவ் தாக்கரே மற்றும் எங்களுக்கு இந்துத்வா பற்றி பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை. நாங்கள் உறுதியான இந்துத்வாவாதிகள்” என கூறியுள்ளார்.

பரபரப்பு

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர் என்பதும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பா.ஜனதா தலைவராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல பா.ஜனதாவின் முன்னாள் நட்பு கட்சியான சிவசேனா இந்துத்வா கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்து வந்தபோதிலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மராட்டியத்தில் கூட்டணி அரசை நடத்தி வருவது நினைவுக்கூரத்தக்கது.

வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரம் இந்துத்வா பிரச்சினையாக மாறி அரசியல் சாசனத்தின் கீழ் பணியாற்றி வரும் கவர்னர், முதல்-மந்திரி இடையே மோதலை ஏற்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story