தூத்துக்குடியில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளுக்கு வைத்த தீயால் வீடு பற்றி எரிந்தது; மெக்கானிக் சாவு


தூத்துக்குடியில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளுக்கு வைத்த தீயால் வீடு பற்றி எரிந்தது; மெக்கானிக் சாவு
x
தினத்தந்தி 14 Oct 2020 12:09 AM GMT (Updated: 14 Oct 2020 12:09 AM GMT)

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளுக்கு தொழிலாளி வைத்த தீயால் வீடு பற்றி எரிந்தது. இதில் மூச்சுத்திணறி மெக்கானிக் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தான்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 42). மெக்கானிக்கான இவர் இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். ஒர்க்‌ஷாப்பின் மாடியில் இவரது வீடு உள்ளது. இவருக்கு கங்காதேவி என்ற மனைவியும், நிதின் (8) உள்பட 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஒர்க்‌ஷாப்பில் உள்ள மோட்டார் சைக்கிள்களை வீட்டின் பக்கவாட்டில் உள்ள பாதையில் அண்ணாமலை நிறுத்தி வைப்பது வழக்கம்.

தகராறு

இவரது வீடு அமைந்து உள்ள காம்பவுண்டில் 27 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் (46) என்பவரும் வசித்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கப்பலுக்கு ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்போது கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் அடிக்கடி மது குடித்து விட்டு, அந்த காம்பவுண்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை, வீட்டை விட்டு காலி செய்ய வைத்தனர். இதையடுத்து அவர் அந்தோணியார் கோவில் தெருவில் குடியேறினார். இதில் ஆத்திரம் அடைந்த மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் அடிக்கடி பழைய காம்பவுண்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார்.

தீ வைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய காம்பவுண்டுக்கு மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் வந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அண்ணாமலையிடம் தகராறு செய்தார். அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு மரிய அந்தோணி தினேஷ் மென்டிசை அனுப்பி வைத்தனர். பின்னர் அண்ணாமலை ஒர்க்‌ஷாப்பில் இருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 சைக்கிள்களை வீட்டின் பக்கவாட்டில் உள்ள பாதையில் நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் மாடியில் உள்ள தனது வீட்டுக்கு தூங்கச் சென்றார்.

நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அண்ணாமலை வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது அங்கு மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் வந்தார். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதனால் தீ மளமளவென மோட்டார் சைக் கிள்களில் பற்றி எரிந்தது.

மயங்கி விழுந்தனர்

இந்த தீயானது அண்ணாமலை வீட்டின் முன்பக்க கதவில் பற்றி எரிந்தது. தொடர்ந்து மின்சார வயரிலும் தீப்பற்றி உள்ளது. இதனால் திடுக்கிட்டு விழித்த அண்ணாமலை வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரது மனைவி, மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் செல்ல அறிவுறுத்தினார். அப்போது மனைவி ஒரு குழந்தையுடன் பக்கவாட்டில் உள்ள பாதை வழியாக அருகில் உள்ள மாடிக்கு சென்று விட்டார். மற்றொரு மகனான நிதின், அண்ணாமலை ஆகியோர் வெளியில் செல்வதற்குள் அங்கு இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீப்பற்றி வெடித்தன. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமானது. இதன் காரணமாக அண்ணாமலை, நிதின் ஆகியோரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அப்போது அவர்கள் மீது தீக்காயமும் ஏற்பட்டது. எனினும் தனது மகன் நிதினை அணைத்தபடி சுவர் ஓரமாக அண்ணாமலை பதுங்கி இருந்தார். வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் மூச்சு விடமுடியாமல் 2 பேரும் சிரமப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

மூச்சுத்திணறி சாவு

இதற்கிடையே, வீடு தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கர் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து மயங்கி கிடந்த அண்ணாமலை, நிதினை மீட்டனர்.

ஆனால், அண்ணாமலை மூச்சுத்திணறி ஏற்கனவே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நிதின் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளுக்கு தொழிலாளி வைத்த தீயால் வீடு பற்றி எரிந்ததில் மெக்கானிக் பலியான பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story