திருமணம் ஆன ஒரே மாதத்தில் விமான பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் ஆன ஒரே மாதத்தில் விமான பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2020 11:02 PM GMT (Updated: 14 Oct 2020 11:02 PM GMT)

திருமணமான ஒரே மாதத்தில் விமான பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏர்-இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் சரண்குமார் (வயது 30). கப்பல் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி (28). இவர், விமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி திருமணம் நடந்தது. நேற்று மதியம் சரண்குமார், சாப்பிட உணவு வாங்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தனது மனைவி அன்பரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் அன்பரசி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அன்பரசியின் சகோதரர் அரவிந்த், மீனம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறு காரணமாக அன்பரசி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிப்பெண் என்பதால் விமான நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் யாராவது தொல்லை தந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவரது கணவர் சரண்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அன்பரசிக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Next Story