அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீர் சாவு


அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீர் சாவு
x
தினத்தந்தி 14 Oct 2020 11:49 PM GMT (Updated: 14 Oct 2020 11:49 PM GMT)

அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது பொட்டல் கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்த ஊரில் இருந்து வனப்பகுதிக்கு செல்லும் பாதையில் கடந்த ஒரு வாரமாக சுமார் 10 வயதுடைய பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.

அந்த யானை உடல் தளர்ந்த நிலையில் ஒரு விதமாக பிளிரியும், கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தது. இதை கவனித்த அப்பகுதி மக்கள் அம்பை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் யானைக்கு உரிய மருத்துவம் செய்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

திடீர் சாவு

இந்த நிலையில் அம்பை அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் யானை நேற்று காலையில் திடீரென்று இறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அம்பை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் கொம்மு ஓம்கார் தலைமையில், அம்பை வனச்சரகர் (பொறுப்பு) சரவணகுமார், பாபநாசம் வனச்சரகர் பாரத் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். யானையின் வாயில் காயம் இருந்ததால் இரை உண்ணமுடியாமல் இருந்ததும், கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

வனப்பகுதியில் புதைத்தனர்

இதையடுத்து வனத்துறையினர் இறந்த யானையை டிராக்டரில் ஏற்றி மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு யானையை முறையாக புதைத்தனர். ஆனால், அந்த யானை எப்படி இறந்தது? என்பது குறித்து தெரியவில்லை. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீரென்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story