பெரியார் சிலையில் கூண்டை அகற்ற கோரி மனு: போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


பெரியார் சிலையில் கூண்டை அகற்ற கோரி மனு: போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2020 4:15 PM GMT (Updated: 15 Oct 2020 4:12 PM GMT)

பெரியார் சிலையில் கூண்டை அகற்ற கோரி அளித்த மனு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரும்பு கூண்டை அகற்ற வலியுறுத்தியும் தி.மு.க., தி.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்தநிலையில் நேற்றுகாலை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், பெரியார் சிலை உள்ள பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

மேலும் அவர், இது தொடர்பாக பெரியார் சிலை முன்பு மாநகர தி.மு.க. செயலாளர் நீலமேகம் எம்.எல்.ஏ., திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் அமர்சிங், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சொக்கா.ரவி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தார்.

பின்னர் அவர், பெரியார் சிலையில் அமைக்கப்பட்ட கூண்டை அகற்றுவது தொடர்பாக கலெக்டர் கோவிந்தராவுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார். ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story