மராட்டியத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் மீட்பு படையினர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை


மராட்டியத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் மீட்பு படையினர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 15 Oct 2020 9:52 PM GMT (Updated: 15 Oct 2020 9:52 PM GMT)

மராட்டியத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மும்பை,

மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மேற்கு மராட்டியம்

குறிப்பாக மேற்கு மராட்டிய மாவட்டங்களான புனே, சோலாப்பூர், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

மும்பையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் தென்-மத்திய மராட்டியம் மற்றும் கொங்கன் பகுதியில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் அரபி கடலை நோக்கி நகர்ந்து அது மேலும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பையில் இன்று பலத்த மழை

இதன் காரணமாக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்து உள்ளது. மேலும் மலையோர மாவட்டங்கள், கொங்கன் மாவட்டங்கள் மற்றும் தென் குஜராத் பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா, ஆந்திராவில் பலத்த மழையால் அந்த மாநிலங்கள் தவித்து வருகின்றன. இதனால் மராட்டியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

உத்தவ் தாக்கரே ஆலோசனை

இது தொடர்பாக நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படையை உஷார்படுத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சோலாப்பூர், பண்டர்பூர், உஸ்மனாபாத், பாராமதி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

இதற்கிடையே பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையொட்டி சோலாப்பூர், சாங்கிலி, புனே மாவட்டங்களில் நதி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக புனே மண்டல அலுவலம் தெரிவித்து உள்ளது.

Next Story