புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைகிறது


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைகிறது
x
தினத்தந்தி 15 Oct 2020 10:50 PM GMT (Updated: 15 Oct 2020 10:50 PM GMT)

புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 245 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டது. 2 பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு அதிகமானது. இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டனர். 7-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து மத்திய குழுவினர் புதுவையில் ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு வழிமுறைகளை கூறினர். அதன்பேரில் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு என்பது குறைந்து வருகிறது. கடந்த 10-ந் தேதியில் இருந்து நேற்று வரை 12 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2½ லட்சம் பேர்

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் களில் 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் பலியாகி உள்ளனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 50 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 793 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 32 ஆயிரத்து 486 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 ஆயிரத்து 551 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

570 பேர் உயிரிழப்பு

இதுவரை 27 ஆயிரத்து 365 பேர் குணமடைந்துள்ளனர். 570 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுச்சேரியில் 472 பேரும், காரைக்காலில் 52 பேரும், ஏனாமில் 42 பேரும், மாகியில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

புதுவையில் உயிரிழப்பு என்பது 1.79 சதவீதமாகவும், குணமடைவது 84.24 சதவீதமாகவும் உள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்கவும், குணமடைவதை அதிகரிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story