பண்டிகை காலம் தொடங்குவதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


பண்டிகை காலம் தொடங்குவதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:52 PM GMT (Updated: 15 Oct 2020 10:52 PM GMT)

பண்டிகை காலம் தொடங்க இருப்பதால் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

பண்டிகை காலத்தில் கோவில் விழாக்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் நெரிசலான கடைப்பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. முதியவர்கள் அதிகம் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள். மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து உணவை பகிர்ந்து கொள்வார்கள்.

இதுபோன்ற சூழலில் சுகாதாரம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. உள் அரங்குகள் மற்றும் நெரிசலான சமூக அரங்குகளில் அதிகமாக சேர்வார்கள். மூக்குக்கு கீழே முகமூடியை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். வாய் முழுமையாக மறைக்கப்படுவதில்லை.

விழிப்புடன் இருக்க...

மிகவும் கடின உழைப்பை செய்த நமது மருத்துவர்கள் குழுவின் முயற்சியால் டெங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் நமது பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்களும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். வானிலையும் மழை மற்றும் குளிர் காற்றுடன் உள்ளது.

தற்போதுள்ள சூழலில் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கவும், முககவசத்தை சரியாக அணியவும், சுகாதாரத்துடன் செயல்படவும், கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும் வேண்டும். மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

எந்தவொரு காய்ச்சலின் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டும். அல்லது நடமாடும் மருத்துவ குழுவை அழைக்கவும். மீண்டும் புதுச்சேரி பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story