தடுப்பணை கட்டுவதை கைவிடக்கோரி கச்சிராயப்பாளையத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்


தடுப்பணை கட்டுவதை கைவிடக்கோரி கச்சிராயப்பாளையத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Oct 2020 2:18 AM GMT (Updated: 16 Oct 2020 2:18 AM GMT)

தடுப்பணை கட்டுவதை கைவிடக்கோரி கச்சிராயப்பாளையத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள கைக்கான் வளவு என்ற இடத்தில் ரூ. 7 கோடி மதிப்பில் தமிழக அரசு தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பணை கட்டினால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறமுடியாத நிலை ஏற்படும். மேலும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயமும் ஏற்படும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நலன் கருதி கைக்கான் வளவு என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் முடிவை தமிழக அரசு கைவிடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தடுப்பணை கட்டும் முடிவுவை கைவிடக்கோரி கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையம் அருகே அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், பழங்குடி இன மக்கள் சங்க மாநில துணைத் தலைவர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இப்படி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. எனவே அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். அப்போது போலீசாருக்கும், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரை கண்டித்தும், தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரியும் அரசியல் கட்சியினர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து அரசியல் கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story