‘அ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டர் கூட முதல் அமைச்சராக வர முடியும்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


‘அ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டர் கூட முதல் அமைச்சராக வர முடியும்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2020 2:22 AM GMT (Updated: 16 Oct 2020 2:22 AM GMT)

அ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டர்கூட முதல்-அமைச்சராக வர முடியும் என்று பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கெடார் கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜா தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பெரும்பாக்கம் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் மாவட்ட செயலாளரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பாசறை உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தும், புதியதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை அட்டையை வழங்கியும் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக பலரும் ஆர்வமுடன் சேர்ந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட தயாராகி கொண்டிருக்கிறார்கள். இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. ஜெயலலிதா நம்மோடு இல்லாமல் நாம் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும். உழைப்பவர்களுக்கு மரியாதை, அங்கீகாரம் வழங்கி பதவிகளை தேடி கொடுத்து அழகுபார்க்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். அ.தி.மு.க.வில்தான் சாதாரண கிளை செயலாளர் மாவட்ட செயலாளர் ஆகலாம், சாதாரண தொண்டன் முதல்-அமைச்சர் ஆகலாம். இது தி.மு.க.வில் நடக்குமா? கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு சாதாரண தொண்டன் இன்று முதல்-அமைச்சராக இருக்கிறார். இது அ.தி.மு.க.வில் மட்டுமே நடக்கும்.

இந்த ஆட்சி மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை, எதிர்ப்பலையும் இல்லை, நல்லெண்ணம்தான் இருக்கிறது. அதை வாக்குகளாக மாற்றுகிற பொறுப்பு பாசறை உறுப்பினர்களிடம் உள்ளது. மற்ற கட்சிகளைப்போல் தலைவர்களை நம்பியே இந்த இயக்கம் இல்லை. தொண்டர்களை நம்பியே இந்த இயக்கம் உள்ளது. வரக்கூடிய தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் வெற்றிவேல், ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவக்குமார், விவசாய அணி செயலாளர் குப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகதாஸ், கிளை செயலாளர்கள் காசிநாதன், நாகப்பன், ஏழுமலை, ராமதாஸ், துரை, சக்தி, ஜெயப்பிரகாஷ், கெடார் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் தமிழ்செல்வன், சிறுவாலை கூட்டுறவு வங்கி தலைவர் சீனு, துணைத்தலைவர் தணிகாசலம், இயக்குனர் கார்த்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் திருவேங்கடம், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story