மும்பையில் ஓடும் மின்சார ரெயில்களில் ‘அனைத்து பெண் பயணிகளையும் அனுமதியுங்கள்’ ரெயில்வேக்கு அரசு கடிதம்


மும்பையில் ஓடும் மின்சார ரெயில்களில் ‘அனைத்து பெண் பயணிகளையும் அனுமதியுங்கள்’ ரெயில்வேக்கு அரசு கடிதம்
x
தினத்தந்தி 16 Oct 2020 9:27 PM GMT (Updated: 16 Oct 2020 9:27 PM GMT)

மும்பையில் அனைத்து பெண்களையும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ரெயில்வேக்கு மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனினும் மாநில அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

மின்சார ரெயில்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் மெட்ரோ ரெயில் சேவைக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி வருகிற திங்கட்கிழமை முதல் மும்பையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இதுதவிர ஏற்கனவே மாநிலத்தில் ஆட்டோ, டாக்சி, பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மும்பையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மாற்று திறனாளிகள், டப்பாவாலாக்கள், வெளிநாட்டு தூதரக ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கும் சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

பெண்களை அனுமதிக்க...

இதற்கிடையே பொதுமக்களை மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டும் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. அக்டோபர் 15-ந் தேதி வாக்கில் இதுதொடர்பாக சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி ஆதித்ய தாக்கரே தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதன்படி மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் பெண் பயணிகளை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.

கடிதம்

இதையடுத்து அனைத்து பெண் பயணிகளையும் இன்று (சனிக்கிழமை) முதல் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்குமாறு ரெயில்வே நிர்வாகத்திற்கு மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து மாநில பேரிடர், மீட்பு மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர் கிஷோர் ராஜீ நிம்பல்கர் மத்திய, மேற்கு ரெயில்வே பொது மேலாளர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பை பெருநகரில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரெயில் சேவை வரையிலும் பெண்கள் பயணம் செய்யும் வகையில் மின்சார ரெயில் சேவைகளை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேற்கூறப்பட்ட நேரத்தில் உரிய டிக்கெட் உள்ள அத்தியாவசிய பணியாளர்கள் உள்பட பெண்களை அனுமதிக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் பெண்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய கியூஆர் கோடு தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முடிவு எடுக்கப்பட வில்லை

எனினும் மாநில அரசின் கடிதம் குறித்து ரெயில்வே நிர்வாகம் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

ரெயில்வே வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு தான் மும்பையில் பெண்களை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story