வங்கி ஊழியர்கள் பணி இடஒதுக்கீடு: மத்திய அரசு முடிவால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதிப்பு


வங்கி ஊழியர்கள் பணி இடஒதுக்கீடு: மத்திய அரசு முடிவால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 10:31 PM GMT (Updated: 16 Oct 2020 10:31 PM GMT)

வங்கி ஊழியர்கள் பணி இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் முடிவால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

பொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகள் பதவிக்கான தேர்வு அறிவிப்பில் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட இடஒதுக்கீடு முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி., காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் பெத்தபெருமாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்மாநில குழு உறுப்பினர் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இடஒதுக்கீடு

முன்னதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்துக்களின் நலனைப் பாதுகாக்கவே நாங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறோம் எனக் கூறும் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராகவே சட்டங்களை கொண்டு வருகின்றது. தற்போது வங்கி அதிகாரிகள் தேர்வு ஒன்றை மத்திய அரசு அறிவித்து நடத்தியுள்ளது.

இதில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்ற பெயரில் முன்னேறிய சமூகப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒன்றே சமூக நீதிக்கும், பெரும்பான்மையான இந்துக்களுக்கு விரோதமாக பா.ஜ.க. அரசு செயல்படுவதை உறுதிபடுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story