மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது


மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
x
தினத்தந்தி 16 Oct 2020 11:04 PM GMT (Updated: 16 Oct 2020 11:04 PM GMT)

மேல்மருவத்தூர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது போன்றே இந்த ஆண்டும் நவராத்திரி விழா விமரிசையாக தொடங்கியது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மங்கள இசையை தொடர்ந்து கருவறை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டிருந்தது. காலை 9¼ மணிக்கு சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு மேளதாளம் முழங்க பாதபூஜையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

அகண்ட தீபம்

தொடர்ந்து பங்காரு அடிகளார் அருட்கூடத்தில் இருந்து ஈர உடையுடன் கருவறைக்கு சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். ஒரு கன்னி பெண்ணின் கையில் அகண்டதீபத்தை கொடுத்தார். அந்த பெண் அகண்டதீபத்தை ஏந்திய படியும், 3 சிறுமிகள் அம்மன் அலங்காரத்திலும், உடன் ஒரு சிறுவனுமாக நிற்கவைத்து அகண்டதீபத்திற்கு பல்வேறு வகையான நாட்டு காய்கறிகளை கொண்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டது.

கருவறையிலுள்ள தென்கிழக்கு திசையில் உள்ள அக்னி மூலையில் அமைக்கப்பட்டிருந்த படம் எடுத்த நாகம் சுற்றி காத்து நிற்பதுபோல் அமைக்கப்பட்டிருந்த தனிபீடத்தில் வைக்கப்பட்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.

அமாவாசை வேள்வி

தொடர்ந்து பங்காரு அடிகளார் அகண்டதீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து காத்திருந்த பக்தர்களும் அகண்ட தீபத்தில் எண்ணெய் விட்டு தீபஒளியை வழிபட்டனர். புரட்டாசி மாத அமாவாசையையொட்டி அமாவாசை வேள்வியை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெற்றது. சித்தர் பீடத்தின் நுழைவுவாயில் மற்றும் வளாகம் முழுவதும் கலைநயத்துடன் பூக்களாலும் மின்விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நவராத்திரி கொலு கோவில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த கொலுவில் பெருமாள், முருகன், கிருஷ்ணன் போன்ற தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று தொடங்கிய நவராத்திரி விழா வருகிற 26-ந தேதி வரை சிறப்பு அலங்காரங்களுடன் நடைபெறும். இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆன்மிக இயக்கத்தின் சென்னை மாவட்ட சாலிகிராமம் மற்றும் எண்ணூர் சக்தி பீடத்தினர் மற்றும் மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Next Story