நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா 2 பேர் சாவு


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா 2 பேர் சாவு
x
தினத்தந்தி 16 Oct 2020 11:37 PM GMT (Updated: 16 Oct 2020 11:37 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 4 பேர் உள்பட 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 22 பேரும், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், களக்காடு, சேரன்மாதேவி பகுதிகளில் தலா 3 பேரும், அம்பை பகுதியில் 5 பேரும், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 13 பேரும், பாப்பாகுடி பகுதியில் 2 பேரும், வள்ளியூர் பகுதியில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 607 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 205 பேர் இறந்துள்ளனர்.

தென்காசியில் 13 பேருக்கு தொற்று

தென்காசி மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆலங்குளம், கீழப்பாவூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும், கடையம், தென்காசி, மேலநீலிதநல்லூர், கடையநல்லூர் பகுதிகளில் தலா 2 பேருக்கும், செங்கோட்டை பகுதியில் 3 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 183 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முதியவர் ஒருவர் இறந்து உள்ளார். இதுவரை கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடியில் ஒருவர் சாவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 381 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 709 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 546 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story