ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது


ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 17 Oct 2020 12:17 AM GMT (Updated: 17 Oct 2020 12:17 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி ஆனார்கள். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

5 பேர் பலி

இதற்கிடையில் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 14-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் இறந்தார்.

இதேபோல் ஈரோடு பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஈரோடு நகராட்சி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கடந்த 14-ந்தேதியும், பவானி பகுதியை சேர்ந்த 72 வயது பெண் நேற்று முன்தினமும், பவானி ஜம்பை பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர் கடந்த 14-ந் தேதியும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது.

138 பேர்

மேலும் ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 904 ஆக உயர்ந்து உள்ளது.

அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 55 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 699 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,094 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா தொற்று 9 ஆயிரத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Next Story