பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு


பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2020 2:00 AM GMT (Updated: 17 Oct 2020 2:00 AM GMT)

பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் பஸ் நிலையத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல இருந்த பஸ்களில் ஏறி, அங்கிருந்த பயணிகளிடம் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வேண்டும்.

முக கவசம் அணியாமல் வரும் பயணிகளை டிரைவர், கண்டக்டர்கள் ஏற்றக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து, விற்பனையாளர்களிடம் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

அப்போது பஸ் நிலைய புறக்காவல் நிலையம் அருகில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்த கலெக்டர், அங்கிருந்த போலீசாரிடம், இரு சக்கர வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருந்தவர்களுக்கு முக கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு அறிவுரை வழங்கினார். அவர்களுக்கு முக கவசங்களையும் வழங்கினார். இரு சக்கர வாகனம், சைக்கிள் போன்றவைகளில் முக கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆட்டோ டிரைவர்களிடம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே ஏற்ற வேண்டும் என அறிவுரை வழங்கி, கொரோனா தொற்று நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். நகராட்சி அலுவலர்கள் தினந்தோறும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின் போது கடலூர் தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story