மத மோதலை தூண்டும் கருத்து நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு - போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு


மத மோதலை தூண்டும் கருத்து நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு - போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:15 PM GMT (Updated: 17 Oct 2020 7:38 PM GMT)

நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகம் மீது பல குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகிறார். இதேபோல அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது, வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இதேபோல நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரன்கோலி ஆகியோர் இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மும்பையை சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான சாகில் அஷ்ரப்அலி செய்யது பாந்திரா மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி தெரிவித்த கருத்துகள் அவரது மத உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமில்லாமல், பல கலைஞரின் மனதையும் காயப்படுத்தியதாக கூறியிருந்தார். இதேபோல நடிகையின் சகோதரி இருமதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மதவாத மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Next Story