மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது வழக்கு - கரூர் போலீசார் நடவடிக்கை


மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது வழக்கு - கரூர் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2020 12:15 PM GMT (Updated: 18 Oct 2020 12:02 PM GMT)

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூர்,

சென்னை அயனாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 31). பி.காம் பட்டதாரியான இவர், வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் உறவினர் ஒருவர் மூலம், சிவக்குமாருக்கு கேரளாவை சேர்ந்த சர்மிளாகுமாரி மற்றும் அவரது கணவர் ராஜிவ் ஆகியோர் அறிமுகம் ஆகி உள்ளனர். இதையடுத்து தம்பதி, சிவக்குமாருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

இதையடுத்து கடந்த 26.03.1019 அன்று கரூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சிவக்குமாரை வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அன்று சிவக்குமார் அங்கு வந்து தம்பதியிடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் சில நாட்களில் சிவக்குமாரை தொடர்பு கொண்ட அந்த தம்பதியினர் பணி நியமன ஆணை தயார் ஆகி விட்டது. எனவே மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் பணி நியமன ஆணை வந்து விடும் என கூறினர். இதையடுத்து அதற்கான பணத்தையும் சிவக்குமார் அந்த தம்பதியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு எந்த பணி நியமன ஆணையும் வரவில்லை. இதுகுறித்து கேரளாவை சேர்ந்த தம்பதியை தொடர்பு கொண்டு சிவக்குமார் பணத்தை கேட்டும் திருப்பி தர வில்லையாம்.

இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சத்தை வாங்கி மோசடி செய்த சர்மிளாகுமாரி-ராஜிவ் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கூறி சிவக்குமார் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story