ஈரோடு அருகே துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை - ரூ.1 லட்சம் கொள்ளை


ஈரோடு அருகே துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை - ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 18 Oct 2020 7:30 PM GMT (Updated: 18 Oct 2020 7:30 PM GMT)

ஈரோடு அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையையும், ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள 46புதூர் 19அடிரோடு வள்ளி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). கட்டுமான பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி (56). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் ஆந்திரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் பரமசிவமும், அம்சவள்ளியும் 46புதூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் 2 பேரும் தினமும் இரவு வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறைக்கு சென்று தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் இரவும் வீட்டின் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவர்கள் 2 பேரும் முதல் தளத்தில் உள்ள அறைக்கு தூங்க சென்றுவிட்டனர்.

15 பவுன் நகை

நேற்று அதிகாலை 5 மணிஅளவில் அம்சவள்ளி எழுந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டில் பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வீட்டில் உள்ள அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்த பீரோவும் திறக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் முதல் தளத்திற்கு சென்று தூங்கியிருந்த தனது கணவரை எழுப்பினார். அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகையும், ரூ.1 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி அவர்கள் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நள்ளிரவில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றார்கள்.

வலைவீச்சு

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டில் ஆட்கள் இருந்தபோதே துணிச்சலாக கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எத்தனை நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்? அவர்கள் ஏற்கனவே நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டார்களா? அந்த பகுதியில் சில நாட்களாக மர்மநபர்களின் நடமாட்டம் காணப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story