பால் உற்பத்தியாளர் சங்க முறைகேட்டை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலைவெறி தாக்குதல் 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு


பால் உற்பத்தியாளர் சங்க முறைகேட்டை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலைவெறி தாக்குதல் 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Oct 2020 10:01 PM GMT (Updated: 18 Oct 2020 10:01 PM GMT)

பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட பெயிண்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை அரியூர் ஆனந்தபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்செந்தில்நாதன் (வயது 30), பெயிண்டர். இவரது அண்ணன் அழகிரி (34). பிளம்பர். அண்ணன்-தம்பி இருவரும் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பாலை அரியூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கொடுத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் அரியூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக அழகிரி தட்டிக்கேட்டார். இதனால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒருசில நிர்வாகிகளுக்கும், அழகிரிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கொலைவெறி தாக்குதல்

இந்த நிலையில் அருண்செந்தில்நாதன் நேற்று மாலை சங்கத்தில் பால் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிச்செல்ல முயன்றார். இதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதலில் படுகாயமடைந்த அருண்செந்தில்நாதன் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இது குறித்து வில்லியனூர் போலீசில் அழகிரி புகார் செய்தார். அதில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட காரணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சங்க நிர்வாகிகள் சிலரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story