வட கர்நாடகத்தில் வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்கவைப்பு


வட கர்நாடகத்தில் வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்கவைப்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 10:41 PM GMT (Updated: 19 Oct 2020 10:41 PM GMT)

வட கர்நாடகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர், வாழ்தாரத்தை இழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த ஆண்டும் அங்கு மீண்டும் அதே போன்ற வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வட கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாயத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த ஆறுகளில் இருந்து வெள்ள நீர் மேலே வந்து அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிவாரண முகாம்கள்

தொடர் மழை கலபுரகி, யாதகிரி, விஜயாப்புரா, ராய்ச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் 97 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,, “மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 36 ஆயிரத்து 290 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் 174 நிவாரண முகாம்களை திறந்துள்ளோம். அங்கு 28 ஆயிரத்து 7 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் கடந்த 14-ந் தேதி முதல் பீமா ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை, ராணுவம் மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகிறார்கள்.

22-ந் தேதி வரை மழை

தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காலை 11 மணி வரையிலும் கனமழை பெய்தபடி இருந்தது. அதன் பிறகு மேகமூட்டம் குறைந்து, வெயில் அடிக்க தொடங்கியது. காலையிலேயே மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்வேறு பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. கொரோனா நெருக்கடி காரணமாக ஏற்கனவே நகரில் வாகன நெரிசல் குறைந்துள்ளதால், சிறிது நேரத்திற்குள் இந்த போக்குவரத்து நெரிசல் சீராகிவிட்டது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெங்களூருவில் குறிப்பாக எச்.ஏ.எல். பகுதியில் அதிகபட்சமாக 39.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெங்களூருவில் வருகிற 22-ந் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story