முசிறி அருகே தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் கைது


முசிறி அருகே தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 19 Oct 2020 10:00 PM GMT (Updated: 20 Oct 2020 2:44 AM GMT)

முசிறி அருகே நிலத்தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

முசிறி,

முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சியை சேர்ந்த பச்சனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 45), இவருக்கும், இவருடைய அண்ணன் ராமசாமிக்கும்(55) இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தோட்டத்தில் மரக்கிளைகளை வெட்டியபோது தனபாலுக்கும், ராமசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராமசாமி, அவரது மகன் ராமச்சந்திரன்(30) ஆகியோர் சேர்ந்து தனபாலை மண்வெட்டி, தடி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தந்தை, மகனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முசிறி புதிய பஸ்நிலையத்தில் வெளியூர் தப்பி செல்வதற்காக ராமசாமி, அவரது மகன் ராமச்சந்திரன் ஆகியோர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் தடி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் தந்தை, மகன் இருவரையும் முசிறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story