நடிகையை கற்பழித்து கொன்று விடுவதாக மிரட்டல் வாலிபர் கைது


நடிகையை கற்பழித்து கொன்று விடுவதாக மிரட்டல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2020 9:18 PM GMT (Updated: 20 Oct 2020 9:18 PM GMT)

மராத்தி பட நடிகையை கற்பழித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மராத்தி பட நடிகை தீபாலி போஸ்லே(வயது40). இவர் மும்பை ஓஷிவாரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகமது நகர் மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சந்தீப் வாக்(28) என்ற வாலிபர் சிவசேனா கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறி நடிகையை சந்தித்து அறிமுகப்படுத்தி கொண்டார்.

இதன்பின்னர் நடிகை தீபாலி போஸ்லேவின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டார். இந்தநிலையில் சில நாள் கழித்து தேவையின்றி அவரது நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பவும் மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். இதனை நடிகை தவிர்த்து வந்தார். மேலும் சந்தீப் வாக்கின் செல்போன் நம்பரை பிளாக் செய்தார்.

கொலை மிரட்டல்

இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி மீண்டும் அவரது செல்போன் நம்பருக்கு அழைப்பு வந்தது. இதில் பேசிய சந்தீப் வாக் தனது பிறந்தநாள் விழாவிற்கு வரும்படி நடிகைக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு நடிகை தீபாலி போஸ்லே தனக்கு ரூ.1 லட்சம் தந்தால் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

இதனை கேட்ட சந்தீப் வாக் அவரை சரமாரியாக திட்டி உள்ளார். மேலும் அவரை கற்பழித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அகமது நகரில் வசிக்கும் சகோதரரை நடிகை தீபாலி போஸ்லே தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்தார்.

போலீசில் சிக்கினார்

இதன்பின்னர் நடிகையின் சகோதரர் மிரட்டல் விடுத்த சந்தீப் வாக்கை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு சந்தீப் வாக் சகோதரரிடம் நடிகைக்கு போதைப்பொருள் வினியோகம் செய்து வருவதாக தவறான தகவலை பரப்பினார். இது பற்றி அறிந்த நடிகை தீபாலி போஸ்லே சம்பவம் குறித்து ஓஷிவாரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அகமதுநகரில் பதுங்கி இருந்த சந்தீப் வாக்கை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story