விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நரசிங்கபுரம் - பொய்கைசந்தை சாலை தற்காலிக மாற்றுப்பாதையாக மாற்றம் - அதிகாரிகள் ஆய்வு


விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நரசிங்கபுரம் - பொய்கைசந்தை சாலை தற்காலிக மாற்றுப்பாதையாக மாற்றம் - அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2020 2:17 PM GMT (Updated: 21 Oct 2020 2:17 PM GMT)

தார்வழி சாலையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்குவதால் நரசிங்கபுரம்- பொய்கைசந்தை சாலை தற்காலிக மாற்றுப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

வேலூர்,

வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரத்தில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளம், பயணிகள் ஓய்வறை, சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைத்தல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளன. இதனிடையே டெர்மினல் கட்டிடத்துக்கும், ஓடுதளத்துக்கும் இடையே உள்ள தார்வழி சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவைப்பட்டதால், விமான நிலையத்துக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் பயன்பெறும் வகையில் டெர்மினல் கட்டிடத்துக்கு பின்புறம் சுமார் 900 மீட்டர் தூரம் மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, சமீபத்தில் பூமி பூஜை நடந்தது. இந்த மாற்றுப்பாதை மீண்டும் தார்வழி சாலையில் இணைக்கப்படுகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் இந்த மாற்றுப்பாதை நிரந்தர மக்கள் பயன்பாட்டு பாதையாக அமையும்.

இந்த நிலையில் விமான நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்ட தார்வழி சாலையில் விரிவாக்கப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாற்றுப்பாதைக்கான பணிகளும் தொடக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாதை அமைக்கும் பணிகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால் மக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என வேலூர் தாசில்தார் ரமேஷ், அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் நரசிங்கபுரம் -பொய்கை சந்தை சாலையை தற்காலிக மாற்றுப்பாதையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். 900 மீட்டர் மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் முடியும் வரை இந்தசாலையை நரசிங்கபுரம், இலவம்பாடி, கம்மவார்பாளையம், பொய்கை மோட்டூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட சுமார் 6 கிராமமக்கள் பயன்படுத்துவார்கள் என்றும், தார்வழி சாலை விரைவில் தற்காலிகமாக அடைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story