நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை


நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Oct 2020 2:43 PM GMT (Updated: 21 Oct 2020 2:43 PM GMT)

நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒன்றியத்தில் உள்ள கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று அங்குள்ள அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

காணை ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை, முழு ஊதியம், 4 மணி நேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும், சட்டமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய ஊரக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story