மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்


மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 21 Oct 2020 10:53 PM GMT (Updated: 21 Oct 2020 10:53 PM GMT)

மரக்காணம் அருகே மாயமானதாக கருதப்பட்ட பள்ளி மாணவன் கொன்று புதைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக் கூடம் மூடப்பட்டுள்ளதால் தேவன்ராஜ் வீட்டில் இருந்து வந்தான். அவன் தனக்கென்று தனியாக செல்போன் வைத்திருந்தான். அதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது, டிக்-டாக் சமூக வலைதளத்தில் பாடல்களுக்கு நடனமாடி பகிர்வது வழக்கம்.

கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன் அதன்பின் திரும்பி வரவில்லை. இதனால் கவலை அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் மகனை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

அடித்துக் கொலை

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குறிஞ்சி செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவன்ராஜை தேடி வந்தனர். மாணவன் வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் தேவன்ராஜுடன் கடைசியாக நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (22) என்ற வாலிபர் பேசியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது தேவன்ராஜை அடித்து கொலை செய்து, நொச்சிக்குப்பம் கடற்கரையோரம் சவுக்குத் தோப்பில் புதைத்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

உடலை தோண்டி எடுக்க முடிவு

உடனே நேற்று மாலை அந்த இடத்துக்கு அபினேசை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது பலத்த மழை பெய்ததால் அந்த பகுதி சேறும் சகதியுமாக இருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து அபினேஷ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாஜிஸ்திரேட்டு, தாசில்தார் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை தேவன்ராஜ் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அபினேசிடம் தொடர்ந்து போலீசார் நடத்தி வரும் விசாரணையில் மாணவன் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. காணாமல் போன மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து தேவன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story