திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை


திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2020 11:04 PM GMT (Updated: 21 Oct 2020 11:04 PM GMT)

திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவொற்றியூர்,

ஆவடி சிறப்பு ஆயுதப்படை போலீசில் பெண் போலீசாக பணியாற்றி வந்தவர் பாக்யஸ்ரீ (வயது 28). இவருடைய கணவர் முரளி. இவர், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கவுசிக்(5), நவ்சிக்(2½) என 2 மகன்கள் உள்ளனர்.

திருவொற்றியூர் மதுரா நகரில் வசித்து வந்த முரளியின் தந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முரளி, தனது மனைவி பாக்யஸ்ரீ மற்றும் மகன்களுடன் திருவொற்றியூர் மதுரா நகரில் வந்து தங்கி இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலை பெண் போலீஸ் பாக்யஸ்ரீ, வீட்டின் மாடிக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முரளி, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு தனது மனைவி பாக்யஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் அவரது செல்போன் இருந்தது. அதில் பாக்யஸ்ரீ, தற்கொலை செய்வதற்கு முன்பாக, “எனக்கு முதுகுவலி, வயிற்று வலி இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதுபற்றி சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த பாக்யஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story