சென்னை தியாகராயநகரில் துணிகரம் 5 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளை


சென்னை தியாகராயநகரில் துணிகரம் 5 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 21 Oct 2020 11:13 PM GMT (Updated: 21 Oct 2020 11:13 PM GMT)

சென்னை தியாகராயநகரில் மொத்த நகை வியாபார கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தனி ஒரு ஆளாக வந்து முகமூடி அணிந்த கொள்ளையன் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராயநகர் சாருல்லா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து, அதில் உத்தம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை மொத்த வியாபார கடையை நடத்தி வந்தார். அதை தனது அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார்.

நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து, பின்னர் தங்க கட்டிகளாக கொடுத்து, பட்டறையில் நகைகளாக செய்து வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்வார். கடந்த 2 ஆண்டுகளாக இங்கு கடையை நடத்தி வந்தார். இவர் வைர நகைகளும் விற்பனை செய்வார். தங்க-வைர நகைகளை செய்து வாங்கி வந்து, தனது கடையில் ஓரிரு நாள் வைத்து விட்டு, பின்னர் கடைகளுக்கு சப்ளை செய்வதை வாடிக்கையாக செய்வார். இதை யாரோ தெரிந்து கொண்டு, கொள்ளை திட்டம் வகுத்து, கொள்ளையை நேற்று முன்தினம் இரவு இவரது கடையில் அரங்கேற்றி விட்டனர்.

கடை பூட்டு உடைப்பு

ராஜேந்திரகுமாரின் கடையில் 2 ஊழியர்கள் வேலை செய்தனர். அவர்கள் தவிர ராஜந்திரகுமாரும், அவரது மகன் தருண், இன்னொரு மகன் ஆகியோர் மட்டும்தான் இந்த கடையில் வழக்கமாக இருப்பார்கள். பெரும்பாலும் வெளி ஆட்கள் வேறு யாரையும் ராஜேந்திரகுமார் கடைக்குள் அனுமதிப்பதில்லை.

நேற்று காலை 10 மணி அளவில் கடை ஊழியர்கள் இருவரும் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த நகை லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது.

லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் ஒட்டுமொத்தமாக கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறி கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் இதுபற்றி ராஜேந்திரகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்தார். நகைகள் கொள்ளை போனது பற்றி மாம்பலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

முகமூடி கொள்ளையன்

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், தென் சென்னை இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர் வந்து கொள்ளையனின் கைரேகையை பதிவு செய்தார்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தார்கள். கேமராவில் ஒரே ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கொள்ளை ஆசாமி முகத்தை துணியால் மூடி இருந்தார். அவர் தனி ஆளாக கடையின் வெளிப்பக்க பூட்டை உடைத்து, உள்பக்கம் லாக்கரையும் உடைத்து நகைகளை அள்ளிச்சென்று கொள்ளையை அரங்கேற்றி உள்ளார்.

5 கிலோ நகை கொள்ளை

உரிமையாளர் ராஜேந்திரகுமார் கொள்ளை குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 2 கிலோ 125 கிராம் எடையுள்ள தங்க-வைர நகைகள், 2 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 15 தங்க கட்டிகள், 15 வெள்ளி கட்டிகள் ஆகியவை கொள்ளை போய் இருப்பதாக தெரிவித்துள்ளார். தங்க-வைர நகைகள் மற்றும் தங்க கட்டிகள் உள்பட கொள்ளை போனவை 5 கிலோ இருக்கும் என்று கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்றும், வைர நகைகள் இருப்பதால் சரியாக மதிப்பிட முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நகைகளை திருடிய ஆசாமி தொழில் ரீதியான கொள்ளையனாக தான் இருக்க வேண்டும் என்றும், ஓரளவு துப்பு கிடைத்துள்ளது என்றும், கொள்ளையனை பிடிக்க உதவி கமிஷனர்கள் கலியன், ரூபன், மகிமைவீரன் ஆகிய 3 பேரின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடரும் கொள்ளை

தியாகராயநகர் பாண்டிபஜார் பகுதியில் சமீபத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள் கொள்ளை போனது. அதில் சம்பந்தப்பட்ட முக்கிய கொள்ளையனை இன்னும் கைது செய்யவில்லை. அந்த பரபரப்பு அடங்கும் முன்பு தியாகராயநகரில் மீண்டும் இன்னொரு துணிகர கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story