நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44 கோடி லாபம் ஈட்டி சாதனை பேரவை கூட்டத்தில் தகவல்


நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44 கோடி லாபம் ஈட்டி சாதனை பேரவை கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 11:41 PM GMT (Updated: 21 Oct 2020 11:41 PM GMT)

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்று பேரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 104-வது பேரவை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு வங்கியின் தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மண்டல இணைப்பதிவாளர் அழகிரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ரூ.44 கோடி லாபம்

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.44 கோடியே 13 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் நேரடி கடன்கள் மற்றும் இணைப்பு சங்கங்கள் மூலம் ரூ.970 கோடியே 25 லட்சம் அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

களக்காடு, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கிளைகளில் தானியங்கி பணம் பட்டுவாடா எந்திரம் நிறுவப்பட்டு மக்களுக்கு சிறப்பாக சேவை வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் 2,212 குழுக்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் 2,299 குழுக்களும் என மொத்தம் 4,711 குழுக்களுக்கு வங்கி மற்றும் சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் ரூ.78 கோடியே 32 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 9,159 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 54 லட்சம் அளவிற்கு வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 19 ஆயிரத்து 696 சிறு, குறு விவசாயிகள் பெற்ற மொத்த கடன் ரூ.150 கோடியே 37 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு கடன் உதவி திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மிக குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story