விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் விவகாரம்: அ.தி.மு.க.வினர் மீது போலீஸ் தடியடி


விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் விவகாரம்: அ.தி.மு.க.வினர் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 22 Oct 2020 12:27 AM GMT (Updated: 22 Oct 2020 12:27 AM GMT)

விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் விவகாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் உள்ளன. இதில் தி.மு.க.வினர் கட்சி கொடிக்கம்பத்தை புதுப்பித்து கொடியேற்ற போலீசாரிடம் அனுமதி பெற்று இருந்தனர். இதற்காக எட்டயபுரம்-மதுரை ரோட்டில் கொடி தோரணங்களை அந்த கட்சியினர் கட்டியிருந்தனர். சாலையோரங்களில் சிறிய கம்புகளில் கட்சி கொடியையும் கட்டி இருந்தனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமையில் தி.மு.க.வினர் பஸ் நிலையத்தில் உள்ள கொடிக்கம்பம் முன்பு கூடி, கட்சி கொடியை ஏற்றினர்.

போலீஸ் அனுமதி மறுப்பு

அதே சமயத்தில் அ.தி.மு.க.வினரும் கொடியேற்ற போவதாக கூறி பஸ் நிலைய பகுதிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தி.மு.க.வினர் கொடி தோரணங்கள் கட்டியிருந்த பகுதியில் தங்களது கட்சி கொடிகளையும் கட்டுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி போலீசார் மறுத்துள்ளனர்.

ஆனாலும், கட்சி கொடியேற்றுவோம் என்று கூறி மாலை 5 மணியளவில் அ.தி.மு.க.வினர் பஸ் நிலைய பகுதியில் கூடினர். அப்போதும் போலீசார் மீண்டும் கொடி ஏற்ற அனுமதி தரவில்லை. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பஸ் நிலையம் முன்பு கூடினார்கள்.

போலீஸ் தடியடி

அப்போது அங்கு வந்த சின்னப்பன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டிடம் போனில் பேசி அனுமதி பெற்று இருப்பதாகவும், தங்களை கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதை ஏற்க மறுத்த போலீசாருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அ.தி.மு.க.வினர் மீது லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

சாலை மறியல்

தடியடி நடத்தியதை கண்டித்து அ.தி.மு.க.வினர் பஸ் நிலையம் முன்பு மாலை 5.30 மணி அளவில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டு இருந்த சின்னப்பன் எம்.எல்.ஏ.விடம் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபுநபு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் கட்சி கொடிக்கம்பத்தில் சின்னப்பன் எம்.எல்.ஏ. கொடியேற்றினார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வினர் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story