சின்னசேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு 38 நெல் அறுவடை எந்திரங்கள் ரெயில் மூலம் அனுப்பி வைப்பு


சின்னசேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு 38 நெல் அறுவடை எந்திரங்கள் ரெயில் மூலம் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 22 Oct 2020 11:29 AM GMT (Updated: 22 Oct 2020 11:29 AM GMT)

சின்னசேலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 38 நெல் அறுவடை எந்திரங்கள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சின்னசேலம்,

சின்னசேலம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளன. அதேபோல் விழுப்புரம், சேலம், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்காக எந்திரங்கள் இங்கிருந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லும்போது பல்வேறு போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படுவதால் இதை தவிர்க்கும் வகையில் தற்போது ரெயில் மூலம் நெல்அறுவடை எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்துக்கு நெல்அறுவடை எந்திரங்கள் ரெயிலில் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து நேற்று சின்னசேலம் ரெயில் நிலையத்தில்இருந்து ரெயிலில் கர்நாடக மாநிலத்துக்கு 32 நெல் அறுவடை எந்திரங்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரெயில் நிலைய கண்காணிப்பாளர் கிரி பாலாஜி, போக்குவரத்து ஆய்வாளர் மோகனசுந்தரம், வணிக ஆய்வாளர் தாமரைக்கண்ணன், ரெயில் நிலைய மேலாளர் அமித் சரத், நெல் அறுவடை எந்திர உரிமையாளர் சங்க மாநிலத்தலைவர் பழனிவேல், ஓய்வு பெற்ற நிலைய மேலாளர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையிட்டு ரெயிலை அனுப்பி வைத்தனர்.

இந்த நெல்அறுவடை எந்திரங்கள் கார்நாடக மாநிலம் மங்களூரை அடுத்த சூரத்கல் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிராம பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு நெல்அறுவடை எந்திரத்துடனும் ஒரு மினி லாரி மற்றும் 24 வைக்கோல் சுருட்டும் எந்திரம் ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாகவும், நெல் அறுவடை எந்திர உரிமையாளர்களுக்கு சுலபமான முறையில் காலவிரயமின்றி பண செலவு இல்லாமல் வாகன தேய்மானம் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு செல்லப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story