மனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள்


மனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Oct 2020 12:41 PM GMT (Updated: 22 Oct 2020 12:41 PM GMT)

மனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களால் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் சாதி, வருமானம், வாரிசு, இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுக்கான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். பட்டா மாறுதல் கேட்டு பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது விரைவாக சேவை வழங்கும் வகையில் உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.

கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய நிலை இருப்பின், நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை விரிவாக பதிவு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் அவர்களது தலைமையிடத்தில் தங்கியிருந்து பணிபுரிய வேண்டும்.

விருத்தாசலம், சிதம்பரம் சப்-கலெக்டர்கள் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விரைவாக தீர்வு வழங்க வேண்டும். பொதுமக்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைத்து மனுக்கள் மீதும் ஒரு மாதத்திற்கு மேல் நிலுவை இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, சப்- கலெக்டர்கள் சிதம்பரம் மது பாலன், விருத்தாசலம் பிரவின்குமார், வருவாய் அலுவலர் என்.எல்.சி (நில எடுப்பு) கார்த்திகேயன், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை) சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ் பவுலின் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story