தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2020 12:02 AM GMT (Updated: 23 Oct 2020 12:02 AM GMT)

‘தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சங்கரன்கோவில், 

தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியனின் ஏ.வெங்கடேஷ் குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும வளாகத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைக்குப் போக வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

கருணாநிதி ஆட்சியின் இலக்கணம்

1920-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி தமிழகத்தில் தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சிதான் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக கருணாநிதி வைத்துக் கொண்டார். தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது காமராஜர் என்றால், ஏராளமான கல்லூரிகளை திறந்து வைத்தவர் கருணாநிதி தான்.

ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998-ம் ஆண்டு உருவாக்கினார். முதல்-அமைச்சர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. அரசுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார். ரூ.340 கோடியில் டைடல் பார்க்கை 2000-ம் ஆண்டில் கட்டினார். கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார். சிறுசேரியில் வன்பொருள் மென்பொருள் பூங்கா அமைத்தார். தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி நெடுஞ்சாலை ஆக்கினார்.

காலம் நெருங்கி கொண்டிருக்கிறது

இதுபோல பல திட்டங்களை செய்தவர் கருணாநிதி. இத்தகைய கருணாநிதி அரசு (தி.மு.க. ஆட்சி) இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் அல்லிராணி, டாக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் அய்யாத்துரை பாண்டியன் வரவேற்றார். தனுஷ்குமார் எம்.பி. உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலைவாய்ப்புக்காக 5 ஆயிரம் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கு வேலை உறுதி கடிதம் வழங்கப்பட்டது.

Next Story