நாகை வெளிப்பாளையத்தில், ரத்த காயத்துடன் இறந்து கிடந்த மீனவர் - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


நாகை வெளிப்பாளையத்தில், ரத்த காயத்துடன் இறந்து கிடந்த மீனவர் - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Oct 2020 10:15 PM GMT (Updated: 23 Oct 2020 4:23 AM GMT)

நாகை வெளிப்பாளையம் பகுதியில் ரத்த காயத்துடன் மீனவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளியின் பின்புறம் நேற்று 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நெற்றியில் ரத்தக்காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அந்த பகுதி மக்கள் பார்த்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்த அந்த வாலிபர், புதிய நம்பியார் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சாந்தகுமார்(வயது 18) என்பதும், அவர் மீன்பிடி தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் வீட்டை விட்டு நண்பர்களுடன் சென்றவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாந்தகுமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமார் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story