திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 21 டன் எகிப்து வெங்காயம் வந்தது ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை


திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 21 டன் எகிப்து வெங்காயம் வந்தது ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை
x
தினத்தந்தி 23 Oct 2020 10:31 AM GMT (Updated: 23 Oct 2020 10:31 AM GMT)

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு எகிப்து வெங்காயம் 21 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. எகிப்து வெங்காயம் ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி, மீன், இறைச்சி விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் எப்போதும் சந்தை பரபரப்பாகவே காணப்படும்.

இதில் இல்லத்தரசிகள் பலர் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை ஆர்வமாக வாங்கி செல்வார்கள். இதன் காரணமாக சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வெங்காய விற்பனை கடைகள் பல உள்ளன. கடந்த சில நாட்களாகவே பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்தது. தற்போது இதன் விலை குறைந்துள்ளது. இதற்கு காரணம் தென்னம்பாளையம் சந்தைக்கு எகிப்து வெங்காயம் 21 டன் விற்பனை கொண்டுவரப்பட்டது ஆகும். இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் தென்னம்பாளையம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும். ஆனால் அந்த மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருவதன் காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தரமான வெங்காயம் குறைந்த அளவே வந்தது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது வெங்காய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் எகிப்து வெங்காயம் 21 டன் சந்தைக்கு வந்துள்ளது. இந்த வெங்காயத்தின் வருகை காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடாக மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெரிய வெங்காயம் நேற்று ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் எகிப்து வெங்காயம் ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் பலர் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். வருகிற நாட்களில் ஆந்திரா, கர்நாடகாவில் மழை பாதிப்பு குறையவில்லை என்றால் மேலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story