உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி சாவு - மனைவியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி சாவு - மனைவியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 12:39 PM GMT (Updated: 23 Oct 2020 12:39 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் குழந்தைவேல் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி அனுராதா(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. குழந்தைவேல், தனது தந்தை ரங்கநாதனிடம் குடும்ப சொத்தை பிரித்து தர வேண்டும் என கடந்த சில மாதங்களாக கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைவேல், ரங்கநாதனிடம் சென்று, தனது குடும்பத்தை கவனிக்க உடனடியாக பணம் தேவைப்படுவதால் சொத்தை பிரித்து கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையில் இருந்த குழந்தைவேல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதற்கிடையே வீட்டுக்கு வந்த அனுராதா, குழந்தைவேல் வாயில் இருந்து நுரைதள்ளியபடி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது குழந்தைவேலின் அருகில் விஷ பாட்டில் இருந்ததை பார்த்த அனுராதா, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதை அறிந்து தானும் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதற்கிடையே சிறிது நேரத்தில் குழந்தைவேல் பரிதாபமாக இறந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் குழந்தைவேல் இறந்து கிடந்ததையும், அவரது அருகில் அனுராதா விஷம் குடித்த நிலையில் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அனுராதாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட குழந்தைவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, மனைவியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story