பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதான தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு


பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதான தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2020 4:20 PM GMT (Updated: 23 Oct 2020 4:20 PM GMT)

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதான தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 55) . இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவரது மனைவி அய்யம்மாள் (55). இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும் 10 வயது பள்ளி மாணவியை கடந்த மார்ச் மாதம் தங்கவேல், அதே பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையில் நடந்த சம்பவத்தை மாணவி தலைமை ஆசிரியையிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி தனக்கு அந்த பள்ளியில் படிக்க விருப்பமில்லை என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் கேட்ட போது மாணவி தன்னை தங்கவேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் தங்கவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை அய்யம்மாளை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அய்யம்மாளை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கணவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

Next Story