இரும்பு கம்பியால் தாக்கி சிறுவன் படுகொலை தலைமறைவான சகோதரருக்கு போலீஸ் வலைவீச்சு


இரும்பு கம்பியால் தாக்கி சிறுவன் படுகொலை தலைமறைவான சகோதரருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2020 9:46 PM GMT (Updated: 23 Oct 2020 9:46 PM GMT)

பெங்களூரு அருகே இரும்பு கம்பியால் தாக்கி சிறுவனை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான சகோதரரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா தானோஜி பாளையா கிராமத்தில் வசித்து வருபவர் ஜமான். இவரது மனைவி ஆயிஷா. இந்த தம்பதிக்கு 6 வயதில் முகமது ரியான் என்ற மகன் இருந்தான். ஜமான், ஆயிஷாவின் சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் ஹரப்பனஹள்ளி ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெலமங்களாவுக்கு வந்து தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் முகமது ரியான் திடீரென்று காணாமல் போய் விட்டான். தங்களது மகனை ஜமான், ஆயிஷா அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார்கள். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் ஜமான் வீட்டையொட்டி உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் முகமது ரியான் பிணமாக கிடந்தான். இதுபற்றி உடனடியாக நெலமங்களா டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சிறுவனின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது. மேலும் தண்ணீர் தொட்டி அருகே ரத்தக்கறை படிந்த ஒரு இரும்பு கம்பியும் கிடந்தது. இதனால் சிறுவனை யாரோ மர்மநபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு, அவனது உடலை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

சகோதரருக்கு வலைவீச்சு

அதே நேரத்தில் நேற்று முன்தினம் ஜமான் வீட்டின் அருகே, அவரது சகோதரர் மகன் தாதாபீர் (22) என்பவர் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. மேலும் ஜமானுக்கும், அவரது சகோதரர் மகனான தாதாபீருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் தெரிந்தது. அதாவது ஜமானுடன் சேர்ந்து தாதாபீரும் கூலி வேலை செய்துள்ளார். ஹரப்பனஹள்ளியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தாதாபீர் காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரத்தில் தாதாபீருக்கும், இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தாதாபீரை போலீசார் கைது செய்திருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் தனது பெரியப்பா ஜமான் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தாதாபீர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் ஜமானை பழிவாங்கும் நோக்கத்துடன், அவரது மகன் முகமது ரியானை இரும்பு கம்பியால் தாக்கி தாதாபீர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் தாதாபீரும் தலைமறைவாகி விட்டார். இதன் காரணமாக அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட தாதாபீரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் நெலமங்களாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story