நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2020 8:56 AM GMT (Updated: 24 Oct 2020 9:06 AM GMT)

நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களின் உண்மையான கணக்கெடுப்பை மீனவ பிரதிநிதிகளுடன் இணைந்து நடத்த வேண்டும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குளங்களை குத்தகைக்கு வழங்க வேண்டும், உள்நாட்டு மீனவர்களுக்கு மீனவர் வாரியத்தின் வழியாக ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய சேமிப்பு நிவாரண திட்டத்தில் ரூ.4,500 உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளையும், மீன்வளத்துறையையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் செலஸ்டின் தலைமை தாங்கினார். ஜேசுராஜன், ஜோனி, மங்களம் ராஜ், அலெக்சாண்டர், இசக்கிமுத்து, தாமஸ், வினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் உசைன், மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் மீன் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story