தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி


தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 25 Oct 2020 12:00 AM GMT (Updated: 25 Oct 2020 12:00 AM GMT)

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை, 

பா.ஜனதாவை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் தேவேந்திர பட்னாவிஸ். 3 கட்டங்களாக நடைபெற உள்ள பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதால் அவர் அந்த மாநிலத்துக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார். பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தன்னுடன் பயணம் செய்த சில தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தேவேந்திர பட்னாவிசும் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அவர் நேற்று மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கடவுளின் விருப்பம்

ஊரடங்கு தொடங்கியது முதல் நாள்தோறும் உழைத்து வருகிறேன். தற்போது இதையெல்லாம் நிறுத்தி கொண்டு, நான் சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும் என கடவுள் விரும்புகிறார் என நினைக்கிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து கொண்டு எல்லா மருந்துகளையும் சாப்பிடுகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். எல்லோரும் உங்களை பார்த்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story