பெங்களூருவில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை ஒசகெரேஹள்ளியில் 200 வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது


பெங்களூருவில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை ஒசகெரேஹள்ளியில் 200 வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது
x
தினத்தந்தி 25 Oct 2020 12:50 AM GMT (Updated: 25 Oct 2020 12:50 AM GMT)

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவில் கொட்டி தீர்த்த கனமழைக்கு, ஒசகெரேஹள்ளியில் 200 வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. உணவு பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், மக்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இரவில் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதலே பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணியளவில் கருமேகங்கள் ஒன்றுகூடி மழை பெய்ய தொடங்கியது.

முதலில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது. குறிப்பாக மைசூரு சாலை, ஒசகெரேஹள்ளி, கோரமங்களா, பீனியா, பனசங்கரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு முழுவதும் விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிக்குள் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒசகெரேஹள்ளி பகுதியில் ஓடும் ராஜகால்வாயில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.

சாமி சிலைகள் இடமாற்றம்

இதனால் வெள்ளநீர் அருகே இருந்த 200 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் பழமை வாய்ந்த கவிசித்தேஸ்வரா கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

ஒசகெரேஹள்ளியில் உள்ள பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயா கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கருவறைக்குள் புகுந்த மழைநீரால் சாமி சிலைகள் மூழ்கின. 6 முதல் 8 அடி வரை மழைநீர் தேங்கி நின்றது. கோவிலில் உள்ள சாமி புகைப்படங்களும் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து அந்த கோவிலில் இருந்த சாமி சிலைகள், புகைப்படங்கள், சாமிக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், துணிகள் எல்லாம் பத்திரமாக எடுத்து செல்லப்பட்டு அருகே இருந்த பத்மாவதி மீனாட்சி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது தத்தாத்ரேயா கோவிலை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அகற்றும் பணி

இந்த நிலையில் மழைக்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் இரவு உணவு சமைக்காமல் மக்கள் பசியால் வாடினர். மழையில் அடித்து செல்லப்பட்டன வாகனங்களும் நேற்று மீட்கப்பட்டன. கோரமங்களா பகுதியில் பெய்த கனமழைக்கு ஓட்டல்கள், பார்கள், பப்புகளில் தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து ஊழியர்கள் வெளியே ஊற்றினர்.

இந்த நிலையில் நேற்று ராஜகால்வாயில் அடித்து வரப்பட்ட கழிவு பொருட்களை அகற்றும் பணி பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நடந்தது.

Next Story