ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜைபொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்


ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜைபொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 25 Oct 2020 4:00 AM GMT (Updated: 25 Oct 2020 4:00 AM GMT)

ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜைபொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

கரூர், 

ஆயுதபூஜை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) கொண் டாடப்படுகிறது. இதையொட்டி அலுவலகம், வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பூஜையின் போது தேங்காய், பழம், பழ வகைகள், பொரி உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். தொழிற்சாலைகளில் எந்திரங்களை சுத்தம் செய்தும் பூஜைகள் நடத்தப்படும்.

இந்த நிலையில் கரூரில் ஆயுதபூஜைக்கான பூஜை பொருட்கள் வாங்குவதற்காக கரூர் ஜவகர்பஜார், காமராஜ் மார்க்கெட் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் இருந்தது. பூஜை பொருட்கள், பழங்கள், பொரி மற்றும் வாழைக்கன்று ஆகியற்றை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது. கடைவீதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொதுமக்களின் கூட்டம் கடைவீதிகளில் சற்று குறைந்தே காணப்பட்டது.

விலை விவரம்

பொரி, பொட்டுகடலை, நிலக்கடலை கலந்து பாக்கெட்டுகளில் பொட்டலமிட்டு பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. ஒரு பாக்கெட் ரூ.20-க்கு விற்பனையானது. தனியாக ஒரு லிட்டர் பொரி ரூ.8-க்கு விற்றது. ஆயுதபூஜையையொட்டி சாமி படத்திற்கு அணிவிக்கக்கூடிய பூமாலை விலை சற்று உயர்ந்திருந்தது. சிறிய செவ்வந்தி மாலை ஒன்று ரூ.120-க்கும், சம்மங்கி மாலை ரூ.150-க்கும் விற்பனையானது. வாழைப்பழம் ஒரு சீப் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், பழவகைகளில் பன்னீர் திராட்சை ரூ.100-க்கும், ஆப்பிள் ரூ.120-க்கும், மாதுளை ரூ.180-க்கும் விற்பனை ஆனது. கதம்பம் ஒரு முழம் ரூ.15-க்கும், வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும், மாவிலை ரூ.5, ரூ.10, வாழை இலை ஒன்று ரூ.7-க்கும் விற்றது. இதேபோல தேங்காய் ரூ.20, ரூ.30 என்ற விலையில் விற்பனை ஆனது. திருஷ்டி பூசனி ரூ.20, எலுமிச்சை பழம் ரூ.5, ரூ.6 என்கிற விலையில் விற்பனையானது.

லாலாபேட்டை

லாலாபேட்டை, கள்ளபள்ளி, கருப்பத்தூர், பிள்ளபாளையம், கொம்பாடிபட்டி, வல்லம், மேட்டு மகாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்து வாழை க்கன்றுகளை விவசாயிகள் நேற்று விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த லாலாபேட்டை வாழை மண்டியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆயுதபூஜையொட்டி சென்றனர். சில வியாபாரிகள் சரக்கு வாகனம் மூலம் மொத்தமாக வாழைக் கன்றுகளை விற்பனைக்காக வாங்கி சென்றனர்.

நொய்யல்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், நல்லி கோவில், புகளூர், தண்ணீர்பந்தல், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூச்செடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் தொழிலாளர்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பையில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் தினசரி ஏல பூ மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரிகள் பூக்களை வாங்கி மாலைகளாகவம், தோரணங்களாகவும் கட்டியும், உதிரி களாகவும் ஆகும் வியாபாரம் செய்கின்றனர்.

சில வியாபாரிகள் உதிரிப் பூக்களை பிளாஸ்டி கவரில் போட்டு கட்டி கட்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.1,100-க்கும், முல்லைப்பூ ரூ.1000, செவ்வந்திப்பூ ரூ.300-க்கும், சம்பங்கிப்பூ ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், ரோஜா ரூ.350-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.15-க்கும், துளசி ஒரு கட்டு 15-க்கும் விற்பனையானது. ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

Next Story