ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம் - குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை


ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம் - குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Oct 2020 9:30 AM GMT (Updated: 25 Oct 2020 9:23 AM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்களின் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜையை முன்னிட்டு வீடுகளில் மட்டுமின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, லேத் பட்டறைகள், பஸ் கம்பெனி, கல்வி நிறுவனங்களில் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவதை பொதுமக்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜையும், நாளை (திங்கட்கிழமை) விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜையை கொண்டாடும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.

சேலம் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உள்ள பொரி கடைகளில் நேற்று பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொரி வாங்க வந்த பொதுமக்கள் முககவசங்களை அணிந்து வந்திருந்தனர். அதேசமயம், அனைத்து கடைகளிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. செவ்வாய்பேட்டையில் உள்ள பொரி கடைகளில் தொழிற்சாலைகளில் சாமி கும்பிடுவதற்காக மொத்தமாக பொரிகளை சிலர் வாங்கி சென்றனர்.

அதேபோல், வீடுகளுக்கு தேவையான பொரிகளையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதனால் செவ்வாய்பேட்டை மற்றும் கடைவீதியில் கூட்டம் அலைமோதியது. அதாவது, ஒரு பக்கா பொரி ரூ.10-ம், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ பொட்டுக்கடலை ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும், ஒரு கிலோ நிலக்கடலை ரூ.120-ம், ஒரு கிலோ அவுல் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சேலம் குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு, கடைவீதி பகுதியிலும், சாலையோரத்தில் தற்காலிகமாக பொரி, திருஷ்டி பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து விற்பனை செய்தனர். சேலம் கடைவீதி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல பகுதியில் திருஷ்டி பூசணிக்காய், வாழைகுலை, பழங்கள், பூக்கள் விற்பனை அமோகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 60 வரைக்கும், ஒரு கிலோ மாதுளை ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஒரு கிலோ கொய்யாப்பழம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் திருஷ்டி கழிப்பதற்காக பொதுமக்கள் சாம்பல் பூசணிக்காய்களை வாங்கி சென்றனர். அதேபோல் மாஇலை மற்றும் வாழைக்கன்றுகள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. இதுதவிர, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, குங்குமம், விபூதி, ஊதுப்பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்கி சென்றனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் வ.உ.சி. மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக பூக்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் பூக்களின் விலையை ஒப்பிடுகையில் நேற்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.

இதேபோல், ஒரு கிலோ சன்னமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், காக்காட்டான் பூ ரூ.480-க்கும், அரளி ரூ.300-க்கும், சாமந்தி ரூ.240-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.150-க்கும், ஜாதிமல்லி பூ கிலோ ரூ.320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

Next Story