டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்கக்கூடாது போலீஸ் டி.ஐ.ஜி. எச்சரிக்கை


டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்கக்கூடாது போலீஸ் டி.ஐ.ஜி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2020 4:52 AM GMT (Updated: 26 Oct 2020 4:52 AM GMT)

டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவதானப்பட்டி, 

தேவதானப்பட்டியில் உள்ள மேரிமாதா கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் வரவேற்றார். கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் கூட்டத்தில், டி.ஐ.ஜி. முத்துசாமி பேசியதாவது:-

18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளை போலீசார் அன்போடு நடத்த வேண்டும். அவர்கள் கோர்ட்டுக்கு செல்வதற்கு முன்பு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்குவதுடன், குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்கும் போது சமுதாயமும் அவர்களை குற்றவாளிகளாக பார்க்கும். உரிய அறிவுரை வழங்கினால் இளம் குற்றவாளிகள் பிற்காலத்தில் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாயம் மதுபானம் விற்கக்கூடாது. அவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது என்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீசாருக்கு பயிற்சி

இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அப்துல் காதர், மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி வெங்கடேசன், முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரம், கல்லூரி முதல்வர் ஐசக் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, குழந்தைகள் மீதான வன்முறையை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கரன் நன்றி கூறினார்.

Next Story