திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2020 5:37 AM GMT (Updated: 26 Oct 2020 5:37 AM GMT)

வேலூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பு சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்பாடி, 

வேலூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பு சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் பாஸ்கர், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், மாநகர செயலாளர் ஆதிமோகன், மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிசிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அணைக்கட்டு தொகுதி செயலாளர் க.கோட்டி என்கிற கோவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சஜின்குமார், வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் விஜயசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் நீலசந்திரகுமார் கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், மனுஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும், தொல்.திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அவர் பேசிய வீடியோவை தவறாக ‘எடிட்’ செய்ததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மனுஸ்மிருதி நூலின் நகலை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களிலும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல துணைத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தொல்.திருமாவளவனை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். இதில் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story