உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலம்: எடியூரப்பா தொடங்கிவைத்தார் - அரண்மனை வளாகத்தில் எளிமையாக நடந்தது


உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலம்: எடியூரப்பா தொடங்கிவைத்தார் - அரண்மனை வளாகத்தில் எளிமையாக நடந்தது
x
தினத்தந்தி 27 Oct 2020 12:44 AM GMT (Updated: 27 Oct 2020 12:44 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே மிகவும் எளிமையாக நடந்தது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கிவைத்தார். இந்த ஊர்வலம் 26 நிமிடத்தில் நிறைவடைந்தது.

மைசூரு,

கர்நாடகத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிகக்க நிகழ்ச்சிகளில் மைசூரு தசரா முக்கியமானதாகும்.

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் கோலாகலமாகவும், பாரம்பரியமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. கி.பி.1610-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் தசரா விழா மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது முதல் கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதுபோல் கொரோனா களப்பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்களை கவுரவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 410-வது தசரா விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. மைசூரு அருகே சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலர்தூவி டாக்டர் மஞ்சுநாத் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் தசரா விழாவை தொடங்கிவைத்தார்.

அன்று முதல் மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தர்பார் நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் பாரம்பரியம், சம்பிரதாய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. அரண்மனை வளாகத்தில் தினமும் 2 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி ஏராளமானோர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கவும், மின்னொளியில் ஜொலிக்கும் அரண்மனையை கண்டுரசிக்கவும் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் சிரமப்பட்டனர்.

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜை விழா நடந்தது. இதில் மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், இளவரசி திரிஷிகா குமாரி ஆகியோர் கலந்துகொண்டு, மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை இளவரசர் யதுவீர் முன்னிலையில் மல்யுத்த போட்டி நடந்தது.

இதில் மொட்டையடித்த 2 வீரர்கள் மல்லுக்கட்டினர். ஒருவீரரின் தலையில் ரத்தம் சொட்டியதும், போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இளவரசர் யதுவீர் வெள்ளி ரதத்தில் வீரவாளுடன் அமர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள பன்னிமரத்திற்கு அவர் மன்னர் குடும்ப பாரம்பரியம்படி சிறப்பு பூஜைகளை செய்தார். பூஜைகளை முடித்துவிட்டு ரதத்தில் அரண்மனைக்கு வந்த இளவரசர் யதுவீர் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்தினார். இது அரை மணி நேரம் நடந்தது.

இதற்கிடையே ஜம்புசவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியில் எழுந்தருளும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை, சாமுண்டிமலையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவலால் ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே நடந்தது. இதில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனத்தில் ஊர்வலமாக வந்த சாமுண்டீஸ்வரி அம்மனை பார்க்க சாலையின் இருபுறமும் ஏராளமானோர் நின்று அம்மனை வழிபட்டனர்.

அரண்மனை வளாகத்திற்கு வந்த சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்-மந்திரி எடியூரப்பா சிவமொக்காவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மைசூரு லலிதாமஹால் அருகில் உள்ள மைதானத்தில் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மைசூரு அரண்மனைக்கு வந்த அவர், அங்கு வைக்கப்பட்டு இருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். அதன் பின்னர் ஜம்புசவாரி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

முன்னதாக ஜம்புசவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்துள்ள அபிமன்யு, காவேரி, கோபி, விக்ரம், விஜயா ஆகிய 5 யானைகளும் குளிப்பாட்டி, அலங்கரிக்கப்பட்டன. பின்னர் அரண்மனையில் உள்ள கோடி சோமேஸ்வரா கோவிலுக்கு அழைத்துவரப்பட்டன. அதுபோல் குதிரைகள், ஒட்டகம், மாடுகளும் அலங்கரித்து அந்த கோவிலுக்கு வரவழைக்கப்பட்டன. அங்கு அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் கலந்துகொண்டார். பின்னர் யானைகளுக்கு வாழைப்பழம், வெல்லம், அரிசி, கரும்புகளை வழங்கினார்.

இதற்கிடையே மதியம் 2 மணி அளவில் அரண்மனை வளாகத்தில் அபிமன்யு யானை மீது சுமார் 100 கிலோ எடையுள்ள பஞ்சு மெத்தைகள் வைத்து கட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரி பலத்த போலீஸ் பாதுகாப்பில் கிரேன் மூலமாக ஏற்றி கட்டப்பட்டது. அம்பாரி கட்டும் வேலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

கலாசாரப்படி முதல்-மந்திரி எடியூரப்பா மதியம் 2.50 மணி அளவில் அரண்மனை கோட்டை ஆஞ்சநேயர் கோயில் முன்பு நந்திக் கொடி தூணுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதன் பின்னர் அலங்கார அணிவகுப்பு ஊர்வலம் ஏற்பாடுகள் தொடங்கின. சரியாக மாலை 3.44 மணி அளவில் தங்க அம்பாரியுடன் அபிமன்யு விழா மேடை அருகில் வந்தது. அதனுடன் விஜயா, காவேரி யானைகள் வந்தன. அப்போது மேடை மீது முதல்-மந்திரி எடியூரப்பா, இளவரசர் யதுவீர், மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் ரோகிணி சிந்தூரி, மேயர் தஸ்நீமா ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் யானைகள் தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்தின. பின்னர் தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு எடியூரப்பா மலர்களை தூவி சிறப்பு வழிபாடு நடத்தினார். அதைதொடர்ந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை அவர் தொடங்கிவைத்தார்.

ஊர்வலத்தில் விஜயா, காவேரி யானைகள் இடது-வலது புறமாக வர, நடுவில் அம்பாரியை சுமந்தப்படி அபிமன்யு வீரநடை போட்டது. அதன் பின்னர் கோபி மற்றும் விக்ரம் யானைகள் ஊர்வலத்தில் தனித் தனியாக சென்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க ஜம்பு சவாரி ஊர்வலம் சென்றன. இதற்கு முன்பு 21 தடவை பீரங்கி வெடிகுண்டு சத்தம் முழங்கப்பட்டது. மேலும் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். அதன் பின்னர் ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலத்தில் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட கலாசார குழுவினரும், 40-க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகளும், பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களும் அணிவகுத்து செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையாக தசரா விழா நடந்ததால், 2 அலங்கார ஊர்திகள் மட்டுமே பங்கேற்றது. அதில் ஒன்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்தி ஆகும். மேலும் 5 கலைக் குழுவினரும், குதிரைப் படையினர், பேண்டு வாத்தியக் குழுவினர், போலீசார் ஆகியோர் ஊர்வலத்தில் சென்றனர். இந்த ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் 400 மீட்டர் வரை மட்டுமே நடந்தது.

மாலை 3.44 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மாலை 4.10 மணி அளவில் நிறைவடைந்தது. இந்த ஆண்டு 26 நிமிடத்தில் தசரா ஊர்வலம் நிறைவடைந்தது. அத்துடன் 410-வது தசரா விழா நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தை பார்வையிட 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. விழாவில், பிரதாப் சிம்ஹா எம்.பி., எம்.பி. எம்.எல்.ஏக்கள் ராமதாஸ், எல்.நாகேந்திர, ஜி.டி.தேவேகவுடா, சி.டி.ரவி, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட பலர் கலந்துகெகாண்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், தசரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட குழுவினர் என 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் ஜம்புசவாரி ஊர்வலம் முடிவடைந்ததும் பன்னிமண்டபத்தில் லைட் ஷோ, தீப்பந்து சாகச விளையாட்டுகள் நடைபெறும். இதனை கவர்னர் தொடங்கிவைப்பார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதனால் கவர்னர் வஜூபாய்வாலா இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடந்த தசரா விழா எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக முடிந்தது. ஆனால் தசரா ஊர்வலத்தை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தசரா விழா ஊர்வலம் களையிழந்து காணப்பட்டது.

விழாவையொட்டி மைசூரு அரண்மனை மற்றும் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


``````````

-

``````




விஜயாப்புரா,

விஜயாப்புரா அருகே, குடும்பத்தினர் கண்முன்பே ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. அவர் காதல் தோல்வியில் தற்கொலை முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது. அப்போது அந்த வழியாக ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஐஸ்வர்யா திடீரென்று ஆற்றில் குதித்தார். இதில் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அலமேலா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் குதித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது. பின்னர் ஐஸ்வர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.

காதல் தோல்வியால் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து அலமேலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். குடும்பத்தினர் கண்முன்னே ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஜயாப்புராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story